நிலச்சரிவில் 245 க்கும் மேற்பட்டோர் பலி ஒன்றிய அரசு கேரள அரசுக்கு துணை நிற்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஆக.2: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முகம்மது ஹுசைன் ஜவாஹிரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செய்யது அகமது கரீம், பொருளாளர் முகம்மது யாசிர், துணைத் தலைவர் நபில் அஹ்மத், துணைச் செயலாளர் முகம்மது ராபி, கபீஸ், ஆசிக், யஹ்யா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 245க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 400க்கும் அதிகமான குடும்பங்கள் வயநாடு மற்றும் சூரல்மலா ஆகிய பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர். அளவுக்கு அதிகமாக பெய்த கனமழையும் அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும் தான் இந்த நிலச்சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அண்டை மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்த பேரிடர் , பெரிய மனவருத்தத்தை அளிக்கிறது. இந்த பேரிடரிலிருந்து வயநாடு மக்களும் , கேரள உறவுகளும் விரைந்து நிவாரணம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இந்த சோகமான நேரத்தில் தமிழக மக்களுடன், நாங்களும் உங்களோடு துணையாக நிற்போம் . நிவாரணப்பணிகளில் கேரள அரசும், இந்திய ராணுவமும் களமிறங்கியுள்ளன. ஒன்றிய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. எதிர்கட்சித் தலைவர் வயநாடு பகுதிக்கு நிவாரணப் பணிகளை பார்வையிட பயணிப்பதாக செய்திகள் வருகின்றன. ஒன்றிய அரசு வழக்கம்போல் செய்து வரும் அரசியலை இந்த இழப்பின் போதும் செய்து விடாமல் மக்களுடனும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அரசோடும் உறுதுணையாக நிற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி