நித்திரவிளை, பிப். 20: நித்திரவிளையில் பெண் கேட்டு கொடுக்காததால் காதலி வீட்டு முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். குமரிமாவட்டம் நித்திரவிளை ஆற்றுப்புறம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு வாலிபர் உயர் ரக பைக்கில் வந்து இறங்கினார். அவர் கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை திடீரென தலையில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபர் உடலில் தண்ணீரை பீச்சியடித்தது தீயை அணைத்தனர். அதற்குள் உடல் கருகி வாலிபர் கிழே விழுந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் தீயில் கருகிய நிலையில் கிடந்த வாலிபரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து வாலிபரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் புதுக்கடை அருகே சிறிய வண்ணான்விளை பகுதியை சேர்ந்த மோகனன் என்பவரது மகன் முகேஷ்(25) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் தீக்குளித்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், பெண் கேட்டு கொடுக்காததால் அவர் காதலி வீட்டின் முன் பைக்கில் வந்து தீக்குளித்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது பற்றி முகேஷின் தந்தை மோகனன் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பி.எட் பட்டதாரி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் முகேஷ் பி.எட் பட்டதாரி என்பதும், கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.