Saturday, July 6, 2024
Home » நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி; பாஜ பிரமுகரிடம் விசாரணை: சொத்துக்கள் வாங்கி குவிப்பு?

நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி; பாஜ பிரமுகரிடம் விசாரணை: சொத்துக்கள் வாங்கி குவிப்பு?

by kannappan

சேலம்: தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த பாஜ பிரமுகரை 3 நாள் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் தாதகாப்பட்டி குமரன்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51). இவர் பாஜ பிரமுகர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தினார். இந்த நிறுவனத்தின் கிளைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி, கோடிக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளார். இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த வேலூரை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்படி, சேலம் அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி, பாஜ பிரமுகர் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், திருச்சியை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஜெயராஜ் கொடுத்த புகாரின்படி, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து பாலசுப்பிரமணியம், அவரது மகன் வினோத்குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். சேலம், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியம் மீது புகார்களை கொடுத்தனர். அதில், கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பாலசுப்பிரமணியத்தின் 3 வீடுகள், அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலசுப்பிரமணியத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோவை டான்பிட் கோர்ட்டில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராஜன் மனு தாக்கல் செய்தார். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சேலம் மத்திய சிறையில் இருந்த பாலசுப்பிரமணியத்தை போலீசார் அழைத்துச் சென்று நீதிபதி ரவி முன் ஆஜர்படுத்தினர். போலீஸ் தரப்பில் பாலசுப்பிரமணியத்தை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் நீதிமன்றம், பாஜ பிரமுகர் பாலசுப்பிரமணியத்தை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து  இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராஜன் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் பாலசுப்பிரமணியத்தை சேலத்துக்கு அழைத்து வந்தனர். அவரை ஸ்டேஷனில் வைத்து, நிதி நிறுவன மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம், வேலூர், திருவண்ணாமலை, நாகர்கோவில், திருச்சி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எத்தனை பேரிடம் முதலீடு பெறப்பட்டது, அந்த தொகையில் எத்தனை பேருக்கு பணம் திருப்பி வழங்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்கின்றனர். மோசடி செய்யப்பட்ட பணத்தில் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜ பிரமுகர் பாலசுப்பிரமணியத்தின் போலீஸ் காவல் வரும் 21ம் தேதி முடிவடைகிறது. அதற்குள் மோசடி தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு, அவரை மீண்டும் கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்….

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi