திருத்தணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 14ம் தேதி திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்திரம் ஜெயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வர உள்ளார். இந்நிலையில், இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார், எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, கூடுதல் போலீஸ் எஸ்பி சாய்பிரனீத் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மேடை அமைக்கப்படும் இடம், விஐபிக்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பயனாளிகள் அமரும் இடங்களை ஆய்வு செய்தனர். பின்னர் பயனாளிகளுக்கு குடிநீர், பிஸ்கட், தேநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் மகளிர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக சுழல்நிதி, அரசுநிதி, வங்கிகளில் இருந்து பெறக்கூடிய நிதி உதவி என ரூ.20 ஆயிரம் கோடி வழங்க தமிழக சட்டமன்றத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் இதுவரை பத்தாயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (14ம் தேதி) திருத்தணிக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3 ஆயிரம் கோடிக்கு உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட செயற்பொறியாளர் ராஜவேலு, திருத்தணி நகர பொறுப்பாளர் வினோத்குமார், திருத்தணி ஒன்றிய பொறுப்பாளர் ஆர்த்தி ரவி, காஞ்சிபாடி சரவணன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்….