மஹோபா: உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவரை, அவரது நாற்காலியில் அமர தகுதியற்றவர் என்று கூறிய விவகாரத்தில் சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம், கப்ராய் அடுத்த நாதுபுரா கிராமத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பஞ்சாயத்து தலைவி சவிதா தேவி, கிராமத்தின் வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடனான முதல் காணொலி காட்சி கூட்டத்தில் பங்கேற்றார். பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து நடந்த இந்த காணொலி நிகழ்ச்சியில், சவிதா தேவி பஞ்சாயத்து தலைவருக்கான நாற்காலியில் அமர்ந்து, அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும், கிராமத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது, பஞ்சாயத்து தலைவரான சவிதா தேவிக்கு எதிராக, அவர் பஞ்சாயத்து தலைவருக்கான நாற்காலியில் அமருவதற்கு தகுதியற்றவர் என்று, ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர் கோஷம் எழுப்பினர். அதனால், சவிதா தேவி தனது நாற்காலியில் இருந்து எழுந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், கிராமத்திற்கு வந்து சாதியை வன்மங்களை வெளிப்படுத்திய சிலரை பிடித்து சென்றனர். அவர்களை ஒருவனை மட்டும் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். இதனால், அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து சவிதா தேவியின் கணவர் வீரேந்திரர் கூறுகையில், ‘காணொலி மூலம் நடந்த கிராம வளர்ச்சி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது ராமு என்ற நபர் தனது ஆதரவாளர்களுடன் வந்து பிரச்னை செய்தார். அவர், எங்கள் கிராமத்தை சேர்ந்தவர் அல்ல.இருந்தும், சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் என் மனைவியை, அவரது பஞ்சாயத்து தலைவர் நாற்காலியில் அமர தகுதியற்றவர் எனக் கூறினார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையால், கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு, அங்கிருந்த மற்ற அதிகாரிகள் என் மனைவியை அவரது இருக்கையில் அமர வைத்தனர்’ என்றார். …