விருதுநகர், ஜூன் 14: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மற்றும் இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. நான் முதல்வன் திட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இம்முகாம் நடைபெற்றது.
கூட்டத்தில் உயர்கல்வி பயில்வதற்கான கோரிக்கை தொடர்பான 100 மனுக்களை பெற்று, ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார். உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்களின் சந்தேகங்கள், குறைகளை கேட்டறிந்தார். அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்ற பாடப்பிரிவு துறைகளை தேர்வு செய்வது உள்ளிட்ட அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முதன்மைகல்வி அலுவலர் வளர்மதி மற்றும் பலர் பங்கேற்றனர்.