Tuesday, July 2, 2024
Home » நான் இன்னும் சாகவில்லை; சமாதி நிலையில் இருக்கிறேன்… நித்தியானந்தா பரபரப்பு தகவல்

நான் இன்னும் சாகவில்லை; சமாதி நிலையில் இருக்கிறேன்… நித்தியானந்தா பரபரப்பு தகவல்

by kannappan

புதுடெல்லி: நித்தியானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் பரவி வந்த நிலையில், `நான் சாகவில்லை… சமாதியில் இருக்கிறேன்…’ என்று நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஆசிரம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா மீது பாலியல், கொலை உள்பட ஏராளமான புகார்கள் எழுந்தன. அதன் பிறகு, இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடும் பணியில் கர்நாடகா, குஜராத் போலீசார் ஈடுபட்டனர். இதனால் வெளிநாட்டுக்கு தப்பிய அவர், ஆஸ்திரேலியா அருகே குட்டி தீவை விலைக்கு வாங்கி அதற்கு, ‘கைலாசா நாடு’ என பெயர் சூட்டினார். மேலும் அந்நாட்டிற்கு என தனி நாணயம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.போலீஸ் தேடிய நிலையிலும், தினமும் சமூக வலைதளத்தில் தோன்றி, தனது பக்தர்களுக்கு உரையாற்றுவது, கலந்துரையாடுவது என நித்தியானந்தா இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அவரது வீடியோக்கள் வெளியாகவில்லை. இதனால், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் தனது புகைப்படங்களை வெளியிட்டு அந்த பதிவில் கூறியிருப்பதாவது: என்னை பற்றி ஹேக்கர்கள் இறந்து விட்டதாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் சமாதியில் இருக்கிறேன். ஆனால் சாகவில்லை. என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி கிடைக்க இன்னும் சில நாட்களாகும். எனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். சிகிச்சை இன்னும் முடியவில்லை. அவர்களை மருத்துவர்கள் என்பதை விட என் பக்தர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்கள்.பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். தினந்தோறும் நடைபெறும் நித்யபூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை. தூங்க முடியவில்லை. எனக்கு தெரிந்தவர்களை கூட அடையாளம் காண சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. சமாதி மனநிலை அடைந்து இருக்கிறேன். விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்.என்னை பரிசோதித்த மருத்துவர்களால் என் உடலில் எந்த நோயையும் கண்டறிய முடியவில்லை. எனது இதயம் 18 வயது இளைஞரின் இதயம் போன்று துடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நித்யபூஜைக்காக சமாதியில் இருந்து வரும்போது மட்டும் சில சமயங்களில் உங்களுக்கு பதில் அளிக்கிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி. நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஆனால், உண்மையில் எனக்கு நோய் எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். தனது டிவிட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்கள் மூலம் நித்தியானந்தா வெளியிட்டுள்ள இந்த பதிவுகள் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன….

You may also like

Leave a Comment

thirteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi