நாட்டு வெடிகுண்டு வைத்து 2 தெருநாய்கள் கொலை: தலைமறைவானவருக்கு வலை

குடியாத்தம், ஜன.8: குடியாத்தம் அருகே வீட்டிற்குள் நுழைந்து உணவை சாப்பிட்ட தெருநாய்களை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்துவிட்டு தலைமறைவானரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(45). இவரது வீட்டிற்குள் அடிக்கடி நுழையும் தெருநாய்கள், வீட்டில் சமைத்து வைக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த பாலாஜி, அந்த நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு நாட்டு வெடிகுண்டு வாங்கி வந்து, அதனை அசைவ உணவில் கலந்து தனது வீட்டின் வெளியே வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த 2 தெருநாய்கள் அவற்றை கவ்வி சிறிது தூரம் சென்றபோது, திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில், 2 நாய்களும் உடல் சிதறி பலியானது. பின்னர், பாலாஜி இறந்த நாய்களின் உடல்களை அதே பகுதியில் புதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாக உள்ள பாலாஜியை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டிற்குள் நுழையும் தெருநாய்களை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை