உடுமலை, செப்.27: உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. எஸ்கேபி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேச நாராயணன் தலைமை வகித்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் அம்ஜத் வரவேற்றார். விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சரவணன் 7 நாள் சிறப்பு முகாமில் செயலாற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து விவரித்தார். போதைப் பொருள் விழிப்புணர்வு, மருத்துவ முகாம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு,
பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மரம் நடுதல், பண்பாட்டு விளையாட்டு நிகழ்வுகள், நெகிழி தவிர்த்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும், பேரிடர் மேலாண்மை பற்றிய பயிற்சி அளித்தல் பற்றியும் கலந்துரையாடல் செய்து மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்வுகளை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பத்மாவதி, பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி திட்ட அலுவலர் சண்முகவேலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது