Sunday, July 7, 2024
Home » நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் தொடர் தோல்வி எதிரொலி சசிகலாவை அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ் திட்டம்: ஆதரவாளர்களை தூண்டி விடுவதால் பதிலடி கொடுக்க தயாராகும் எடப்பாடி; மீண்டும் மோதல் வெடித்ததால் பரபரப்பு

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் தொடர் தோல்வி எதிரொலி சசிகலாவை அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ் திட்டம்: ஆதரவாளர்களை தூண்டி விடுவதால் பதிலடி கொடுக்க தயாராகும் எடப்பாடி; மீண்டும் மோதல் வெடித்ததால் பரபரப்பு

by kannappan

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள எம்பி, எம்எல்ஏ, உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருவதால் அதிமுக தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை தூண்டிவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அவருக்கு பதிலடி கொடுக்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்து வருவதால் அதிமுக தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படாததே காரணம் என்று தொண்டர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று முன்தினம் இரவு அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமே தலைமை தாங்கினார். தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ’’சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும்’’ என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினர். பின்னர், இது தொடர்பாக இந்த கூட்டத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது எடப்பாடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இந்தநிலையில் கோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியும் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நேற்று பகிரங்கமாகவே பேட்டியளித்துள்ளார். இதற்கு பதில் அளித்த கடலூர் மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், சிலர் தூண்டிவிட்டதால் அவர்கள் பேசுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அதிமுகவில் தற்போது கோஷ்டி மோதல் வெடிக்க தொடங்கியுள்ளது. ஓபிஎஸ் திட்டத்தை முறியடிக்க எடப்பாடி அதிரடி திட்டம் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.* எடப்பாடி திடீர் ஆலோசனைசேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செம்மலை, நண்பர் இளங்கோவன் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான தங்கமணியும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதனிடையே நேற்று காலை 9.30 மணியளவில் பாஜவின் முன்னாள் தலைவர் கோவை சி.பி.ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.* ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா?சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து நீக்கலாமா என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அவரது ஆதரவாளர்கள் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.* ஓபிஎஸ், இபிஎஸ் பதவி விலக கோரி பரபரப்பு போஸ்டர்கள்கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் விலக கோரி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம், பெங்களூரு சாலை, சேலம் சாலை, 5 ரோடு ரவுண்டானா, காவேரிப்பட்டணம் பனகல் தெரு, தர்மபுரி சாலை, கொசமேடு, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வீட்டிற்கு செல்லும் பகுதிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாடாளுமன்ற தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று ராணுவ கட்டுப்பாட்டுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமையவேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.* ஓபிஎஸ்-உதயகுமார் சந்திப்புபெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று ஓபிஎஸ்சை சந்தித்தார். 3 மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த ஓபிஎஸ், ‘இதுகுறித்து நானே  சந்திக்கிறேன்’ என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பினார். இதற்கிடையில், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கோரி, தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்ப செல்லூர் ராஜூ முடிவு செய்துள்ளார்.* ஜெயலலிதாவைவிட எடப்பாடி சிறந்தவர்அதிமுக கட்சியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் முன் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆதிராஜாராம், ‘‘அதிமுக கட்சியை வழிநடத்தி செல்வதற்கு சிறந்த தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். பழைய எஜமானவர்களின் காலை மீண்டும் கழுவுவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக, எல்லோரும் பிரிந்து இருப்பதால்தான் தோல்வி அடைந்து விட்டோம் என்கிறார்கள். இவர்கள் எல்லாம் இல்லாமலேயே இந்த கட்சி மிகப்பெரிய வெற்றியை மிக விரைவில் பெறும். ஆறுகுட்டி எம்எல்ஏ, அன்றைக்கு ஜெயலலிதா சாவுக்கு காரணம் சசிகலாதான் என்று கூறி வெளியே போனார். நடுவில் மறுபடியும் வந்து சேர்ந்தார். இப்போது மறுபடியும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்கிறார். அவரெல்லாம் ஒரு ஆளா… குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்தவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்’’ என்றார்….

You may also like

Leave a Comment

9 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi