கருங்கல்: நாகர்கோவில் அருகே பள்ளியாடி பகுதியில், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்கள் வகுப்பறையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் ஆட்டம் போடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.ஒரு காட்சியில் ஆசிரியை பாடம் நடத்தும் போது மாணவர் ஒருவர் வாசலில் நின்று நடனம் ஆடுகிறார். இன்னொரு காட்சியில் ஆசிரியை பாடம் நடத்தும் போது ஒரு மாணவன் மேஜை மேல் ஏறி நின்று ஆடுவது போலவும் மற்றொரு காட்சியில் ஆசிரியை பயன்படுத்தும் டெஸ்க்ைக தூக்கி ஆசிரியையை தாக்க ஒரு மாணவர் செல்வது போலவும் காட்சிகள் உள்ளன.மியூசிக் பின்னணியில் இந்த வீடியோவை யாரோ சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். ஒரு மாணவனை ஆசிரியை எச்சரிக்கும் காட்சியும் வீடியோவில் உள்ளது. இதுவரை அரசு பள்ளிகளில் மாணவர்கள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வலம் வந்த நிலையில் தற்போது அரசு உதவி பெறும் பள்ளியிலும் இந்த நிலை அரங்கேறி உள்ளது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசாரும், குழித்துறை கல்வி மாவட்ட கல்வி அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்….