நாகப்பட்டினம்,செப்.25: நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் ஆணைப்படி, எஸ்பி அருண்கபிலன் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரி முன்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காஞ்சனா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு மற்றும் நாகூர் சப் இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், குமரேசன், முகம்மது இணையத்துல்லா, ரவி ஆகியோர் அடங்கிய குழுவினர் இரண்டு சக்கர வாகன சிறப்பு தணிக்கை நடந்தது.
இதில் தலைக்கவசம் இல்லாமலும், செல்போன் பேசிக்கொண்டும், வாகனத்தின் ஆவணங்கள் இன்றியும், 18 வயதுக்கு குறைவானவர்களால் இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் குற்றங்களின் அடிப்படையில் 49 வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உரிய அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் வாகனம் விடுவிக்கப்படும். இந்த திடீர்சோதனை தொடர்ந்து நடைபெறும்.