நாகப்பட்டினம்,செப்.25: நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களின் கூட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்குதள வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் இனிவரும் காலங்களில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாரும் மீன்பிடிப்பது இல்லை.
சுருக்குமடி வலையை முற்றிலுமாக நிறுத்த வசதியாக நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்கள் கலெக்டர், மீன்வளத்துறை இயக்குநர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்தித்து அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, அதிவேக இன்ஜின், அங்கீகரிக்கப்படாத விசைப்படகு ஆகியவற்றை அரசால் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் வழங்குவது.
அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, ஸ்பீடு என்ஜின், அங்கீகரிக்கப்படாத விசைப்படகு ஆகியவற்றை அரசு கையப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஒன்றாக இணைந்து சுருக்குமடி வலை தொழில் செய்யும் விசைப்படகை கடலில் சிறைபிடித்து நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.