உத்திரமேரூர், ஜூன் 24: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள காரணை கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வழங்கல் மற்றும் நவீன விவசாயம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சோழனூர் ஏழுமலை தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இயற்கை விவசாய தன்னார்வலர் நாகராஜன் கலந்துகொண்டு மாடித் தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். மேலும், விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தகுந்த பயிர்களை பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து அரசின் சலுகைகளை பெற அறிவுறுத்தினார். இதில், கலந்துகொண்ட அனைவருக்கும் மாடி தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வழங்கப்பட்டன.