Friday, September 20, 2024
Home » நள்ளிரவில் வழக்கறிஞர் தம்பதி வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்

நள்ளிரவில் வழக்கறிஞர் தம்பதி வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்

by Karthik Yash

திருக்கோவிலூர், ஜூலை 19: திருக்கோவிலூரில் வழக்கறிஞர் தம்பதி வீட்டில் நள்ளிரவில் கொள்ளை கும்பல் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடிவேல் நகர் பகுதியில் வழக்கறிஞரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான செந்தில்குமார் (52) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தேவகி. இவரும் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு உணவருந்திவிட்டு படுக்கை அறையில் தூங்க சென்றுள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் வீட்டின் பின்பகுதியில் உள்ள கேட் திறக்கும் சத்தம் கேட்டுள்ளது. எனினும் இதனை கண்டு கொள்ளாமல் தூங்கிவிட்டனர். மீண்டும் அரை மணி நேரம் கழித்து கதவு உடைப்பது போல் சத்தம் கேட்டதால் இவர்கள் இருவர் மட்டும் தனியாக இருந்ததால் பயத்தில் அறையை விட்டு வெளியே வராமல் அவர்களுடைய உறவினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்து கதவை திறக்க முற்படும்போது உள்ளே இருந்த மர்ம நபர்கள் அங்கிருந்து பின்புற கேட் வழியாக தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் நந்தகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கேட் வழியாக வந்து வீட்டில் உள்ளே பீரோ கதவுகளை உடைத்து திறந்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் துணிகளை சிதற விட்டுள்ளனர். பின்னர் வழக்கறிஞரின் சட்டைபையில் வைத்திருந்த 7ஆயிரம் ரூபாயை மட்டும் திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் இவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்ததால் கொள்ளை கும்பல் மேல் வீட்டின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கும் ஒன்றுமே கிடைக்காததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். திருக்கோவிலூர் டிஎஸ்பி (பொறுப்பு) குகன் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

seventeen + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi