Tuesday, September 17, 2024
Home » நல்லம்பாக்கம் ஊராட்சியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரம்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நல்லம்பாக்கம் ஊராட்சியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரம்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

by Karthik Yash

கூடுவாஞ்சேரி, ஜூலை 16: நல்லம்பாக்கம் ஊராட்சியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, இதுகுறித்து கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசாபுரம், அம்பேத்கர் நகர், சின்ன காலனி, காந்திநகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நல்லம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நல்லம்பாக்கத்தில் உள்ள மலை உச்சியில் சிவலிங்கம் உள்ளது. இதனை பக்தர்கள் சனிக்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபட்டு வருவது வழக்கம். இந்நிலையில், வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் பொதுப்பணி துறைக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆகிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். மேலும், அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வரும் ஆடு, மாடுகள் அப்பகுதியில் உள்ள ஏரியில் தண்ணீர் குடித்து வருகின்றன. மேலும், அப்பகுதி பொதுமக்கள் துணி துவைத்தும், ஆடு மற்றும் மாடுகளை கழுவியும் வருகின்றனர்.

தற்போது, அந்த ஏரியை ஆக்கிரமித்து சிலர் கோயிலுக்கு கட்டிடங்கள் கட்டுவதாக கூறி வணிக வளாகம் போன்று கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனால், ஏரி இருப்பதே தெரியாத அளவிற்கு ஏரியின் அளவு நாள்தோறும் சுருங்கி கொண்டே வருகிறது. மேலும், அப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி உள்ளதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏரி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மர்ம ஆசாமிகள் கஞ்சா மற்றும் மதுபானம் அருந்திவிட்டு அப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஏரி மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலையை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோயில் பெயரில் வசூல்?
நல்லம்பாக்கம் மலை உச்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவலிங்கம் மட்டுமே இருந்து வந்தது. ஆனால், அதனை வைத்து சிலர் சிவன் கோயில் பெயரில் ஏரியை ஆக்கிரமித்து பல்வேறு கட்டிடங்கள் கட்டி வருவதாகவும், இதற்காக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் பணம் மற்றும் நன்கொடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இந்த பணத்தை முறையாக பராமரிக்காமலும், வரவு, செலவு கணக்குகளை காட்டாமலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

You may also like

Leave a Comment

eleven − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi