புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் நேற்று மாதவரம் மண்டலம் 27, 28, 30, 31 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘திமுக ஆட்சியில் தான் இப்பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, மாதவரம் நகராட்சியில் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் துவங்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இந்த பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். விரைவில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனவுடன் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து நலத்திட்ட பணிகளும் விரைந்து முடிக்கப்படும். 31வது வார்டில் 1 முதல் 7வது தெரு வரை அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அரசு கலைக் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கொண்டுவரப்படும். விடுபட்டுள்ள இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். பட்டா இல்லாதவர் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். தமிழகத்திலேயே முதன்மை பூங்காவாக தோட்டக்கலை பூங்கா மாற்றியமைக்கப்படும்,’ என்றார். பகுதி செயலாளர் துக்கராமன், மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன், மிசா மதிவாணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மஞ்சம்பாக்கம் காசிநாதன், வட்ட செயலாளர்கள் நந்தகோபால், ஞானசேகரன், சந்திரசேகரன், பிரேம்குமார் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாதவரம் வெங்கடேசன், ஆனந்தன், அஜய்கோஸ், இளங்கோவன் உள்ளிட்டோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்….