பெங்களூரு: அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கர்நாடகா ராஜீவ் காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 4-ந்தேதி இரவு பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் பெங்களூரு எலகங்கா விமானப்படை விமான தளத்தில் நடந்த விமான கண்காட்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் பெங்களூருவில் தங்கிய அவர் நேற்று காலை ஹெலிகாப்டரில் புறப்பட்டு குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா பாகமண்டலா அருகே செட்டிமானியில் உள்ள ஹெலிபேடு மைதானத்தில் வந்திறங்கினார். அவருடன் அவரது மனைவி சவிதா கோவிந்த் வந்திருந்தார். அங்கிருந்து காரில் அவர்கள் காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரிக்கு சென்றனர். அங்குள்ள பாகண்டேஸ்வரர் கோவிலில் அவர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கோவிலில் உள்ள காவிரி தாய் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கோவில் தலைமை பூசாரிகள் ராஜேஷ் ஆச்சார்யா, சுதீர் ஆச்சார்யா, உதவி பூசாரிகள் அகிலேஷ், பிரசாத், சீனிவாஸ் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். இந்த சிறப்பு பூஜையில் மாநில வீட்டு வசதி வாரிய மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான வி.சோமண்ணா, கலெக்டர் சாருலதா சோமல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மடிகேரி வந்தார். மடிகேரியில் கட்டப்பட்டுள்ள மறைந்த ராணுவ ஜெனரல் கே.எஸ்.திம்மய்யாவின் நினைவிடம் மற்றும் அருங்காட்சியக திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்தநிலையில்பெங்களூருவில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது: இன்று பட்டம் பெறும் மாணவர்களில் 111 பேர் தங்கப் பதக்கம் பெற்றுள்னர். இவர்களில் 87 பேர் நமது மகள்கள். இது கிட்டத்தட்ட 80 சதவிகிதம் மற்றும் மிகப்பெரிய சாதனையாகும். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் குறிப்பாக மருத்துவ அறிவியலில் பெண்கள் நம் நாட்டை வழிநடத்துவார்கள். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்….