Tuesday, July 9, 2024
Home » நமது வாக்கு; நமது உரிமை

நமது வாக்கு; நமது உரிமை

by kannappan

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தம்  உள்ள 12,826 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இத்தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. மாநிலம்  முழுவதும் ஒரே கட்டமாக 31,150 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.13 லட்சம்  போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், ஆதார்  அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். இத்தேர்தலில் 18 வயது நிரம்பிய எந்த ஒரு நபரும், வாக்களிக்க முழு உரிமையுடையவர் ஆவார். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைனில் பெயர் சேர்ப்பு, நீக்கம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்குதல்,  வாக்குப்பதிவை ஆன்லைனில் கண்காணிப்பது, விரைவான தேர்தல் முடிவுகள் என  பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகிறது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி, குற்ற  வழக்குகள், சொத்துகள், தேர்தல் அறிக்கைகள் போன்றவற்றை அறிந்துகொள்ள  வாக்காளருக்கு முழு உரிமையுண்டு. பணம் கொடுத்து, தனக்கு வாக்கு அளிக்கும்படி  கட்டாயப்படுத்தவோ அல்லது வேறு ஒருவருக்கு வாக்கு அளிக்க கட்டளையிடவோ ஜனநாயகத்தில் இடமே இல்லை. நம் ஓட்டு, நம் உரிமை என்பதற்கு இணங்க, நம்மையும், நாட்டையும் ஆளக்கூடிய நபரை  தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் நமக்கு மட்டுமே உண்டு. அதை  உரிய வகையில் பயன்படுத்தினால், நல்ல பிரதிநிதியை  தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது. விலைமதிப்பற்ற வாக்குகளை விற்பது, நாட்டையே  விற்பதற்கு சமம் ஆகும். எனவே எந்த நிர்ப்பந்தத்துக்கும் அடிபணியாமல் நமக்கானவர் யார் என்பதை தீர்மானித்து, நாமே சுயமாக வாக்களிப்பதே சிறந்தது. 18 வயது நிறைவடைந்த  அனைத்து வாக்காளர்களும், தங்களுக்கு கொடுக்கப்படும்  பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல், தங்களின் வாக்குரிமை என்னும் கருவியை  பயன்படுத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே சிறந்த செயல் ஆகும். உள்ளூரில், நமக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை யார் சிறப்பாக செய்து கொடுப்பார்கள் என அலசி ஆராய்ந்து, அதை, தானே  தீர்மானிக்கும் எஜமானர்களாக, வாக்காளர்கள் உள்ளனர். தனிமனித  உரிமைகளுக்கும், தரமான செயல்முறைகளுக்கும், மாநில சுயாட்சியை  நிலைநிறுத்துவதற்கும் வழிவகை செய்து, எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ, அவரை தேர்ந்தெடுக்கும் உரிமை வாக்காளர்களுக்கு  உள்ளது. இதை முறையாக செய்யும் பட்சத்தில் தமிழகம் மேலும் ஏற்றம்  மிகுந்ததாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை….

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi