சென்னை: சென்னை சூளைமேடு அவ்வை நகர் இந்திரா காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (எ) தொப்பி ராஜ்குமார்(33). சூளைமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை மற்றும் 4 கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கடந்த மார்ச் 28ம் தேதி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் முன்பு தான் திருந்தி வாழப்போவதாக கூறி ஒரு வருட காலத்திற்கு எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் என்று நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார்.ஆனால் ரவுடி ராஜ்குமார் கடந்த 17ம் தேதி ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டற்காகவும், ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சூளைமேடு போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் கடந்த 18ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், ரவுடி ராஜ்குமார் நன்னடத்தை பிணையை மீறியதால் நன்னடத்தை காலத்தை தவிர மீதமுள்ள 272 நாட்கள் பிணையில் வெளியே வரமுடியாத வகையில் சிறையில் அடைக்க திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் உத்தரவிட்டார். அதன்படி சூளைமேடு போலீசார் ரவுடி ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்….