நத்தம் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்

நத்தம், அக். 14: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோமணாம்பட்டி, சிறுகுடி, மஞ்சநாயக்கன்பட்டி, சாத்தம்பாடி, புன்னப்பட்டி, சமுத்திராபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பெரும்பாலும் மானாவாரி நிலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த வைகாசி மாத பட்டத்தையொட்டி நிலக்கடலை விதைப்பு செய்தனர். கடந்த மாதம் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர்.

நத்தம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து நத்தம் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி சத்தியேந்திரன் கூறுகையில், ‘‘பாலமேடு பகுதியில் விதைப்பு கடலைப்பருப்பை படி ரூ.150க்கு வாங்கி வந்து வைகாசி பட்டத்தில் விதைத்தோம். நேற்று மழை பெய்ததைத்தொடர்ந்து நிலக்கடலை அறுவடையில் ஈடுபட்டுள்ளோம்.

அறுவடை செய்த பச்சை நிலக்கடலையை நத்தம் மார்க்கெட்டுக்கும், உலர வைத்த நிலக்கடலையை பாலமேடு பகுதிக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். கடந்த காலங்களில் முறையாக மழை பெய்யாததாலும், கடலை எடுக்க வேண்டிய நேரத்தில் மழை பெய்யாததால் விளைச்சலில் போதிய மகசூல் கிடைக்கவில்லை. பச்சையாக உலர வைக்காத நிலக்கடலை கிலோ ரூ.15 முதல் 20 வரையும், உலர்ந்த நிலக்கடலை ரூ.40 முதல் ரூ.55 வரை தரத்திற்கு தகுந்தார் போல் விலை போகிறது’’ என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை