நத்தம், ஜூலை 20: நத்தம் அருகே சமுத்திராப்பட்டி சடையம்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான குவாரியிலிருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் எம்சாண்ட் மணலை ஏற்றி கொண்டு மதுரைக்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை மதுரை தோப்பூரை சேர்ந்த ஜெயராமன் (35) ஓட்டி சென்றார். நத்தம் அப்பாஸ்புரம் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதியது.
இதில் லாரியில் முன்பக்கம் சேதமடைந்தது. இவ்விபத்தில் ஜெயராமன் பலத்த காயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின், அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.