நெல்லை, ஜூலை 2: தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக, கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் ஜூலை 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் நடக்கிறது.
ஜூலை 4ம் தேதி முதுமொத்தான்மொழி, தோட்டாக்குடி, பொன்னாக்குடி, முனைஞ்சிபட்டி, கஸ்தூரிரெங்கபுரம், விஜயநாராயணம் ஆகிய கிராமங்களுக்கும், 5ம் தேதி குறவர்குளம், உறுமன்குளம் ஆகிய கிராமங்களுக்கும், 6ம் தேதி மேலச்செவல், ஆழ்வாநேரி, திடியூர், ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம், இலங்குளம் ஆகிய கிராமங்களுக்கும், 7ம் தேதி சிந்தாமணி, கோவன்குளம் ஆகிய கிராமங்களுக்கும், 11ம் தேதி கொழுமடை, அ.சாத்தான்குளம், செங்குளம், காடன்குளம் திருமலாபுரம், விஜயநாராயணம், திசையன்விளை ஆகிய கிராமங்களுக்கும், 12ம் தேதி மேலத்திடியூர், திருவம்பலாபுரம் ஆகிய கிராமங்களுக்கும், 13ம் தேதி பிரான்சேரி, மூலைக்கரைப்பட்டி, புதுக்குளம், ராமகிருஷ்ணாபுரம், குமாரபுரம் கிராமங்களுக்கும், 14ம் தேதி தெற்கு வீரவநல்லூர், மூலைக்கரைப்பட்டி, தருவை, காடன்குளம் திருமலாபுரம், விஜயநாராயணம், இட்டமொழி ஆகிய கிராமங்களுக்கும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
எனவே, தொடர்புடைய பட்டாதாரர்கள், பட்டா நகல், வில்லங்க சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலம் எனில் இறப்புச் சான்று மற்றும் வாரிசு சான்று, வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி சரியான ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக் கொள்ளலாம். இறப்புச் சான்று, வாரிசு சான்று, பட்டா நகல் தேவைப்படுவோர் உரிய அசல் ஆவணங்களுடன் வந்தால், சான்றுகள் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, உரிய சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.