சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்துக் கொண்டார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9-ம் தேதி பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப். 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. …