நகை மோசடியில் நெத்திலி முதல் திமிங்கலம் வரை சிக்கப்போவதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஆ ணுக்கு நிகராக பெண்களும் கலக்கி வர்றாங்க.. அவங்களுக்கு கட்சியில பதவி கொடுக்க யார் மறுக்கிறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘விழுப்புரம் மாவட்ட தாமரை கட்சியில் பாலியல் புகார் சர்ச்சையில் சிக்கிய மாவட்ட நிர்வாகி ஒருவர், தனது லீலைகளை இன்னும் நிறுத்தி கொள்ளவில்லையாம். கட்சியின் உச்சத்தில் இருந்து கீழ் மட்டம் வரை இதெல்லாம் சர்வசாதாரணம். இதுல மாவட்ட நிர்வாகியான என் மீது மட்டும் நீங்க புகார் கொடுத்தா, நடவடிக்கை எடுத்துடுவாங்களானு நக்கலாக கேட்கிறாராம். இதனால, புரம் கொண்ட மாவட்டத்தில் தாமரை கட்சியில், உறுப்பினர்களாக மகளிர் சேருவதற்கு தயக்கம் காட்டுறாங்களாம்.  ஏற்கனவே இருந்த மகளிர் அணியினர் ஓட்டம் பிடிக்கிறாங்களாம். இதுதொடர்பாக தலைமைக்கும் புகார்கள் அனுப்பியுள்ளார்களாம். சமீபத்தில், விழுப்புரம் தாமரை கட்சி மகளிர் நிர்வாகி ஒருவரிடம், போன் மூலம் பேசிய மாவட்ட நிர்வாகி, கர்ப்பிணியாக இருப்பதால் கட்சிவேலைகளை செய்ய முடியாது, பதவியை ராஜினாமா செய்யும்படி சொன்னாராம். அதுக்கு அந்த பெண் என்னால் கட்சி வேலை எல்லாம் செய்ய முடியும். என்னால முடியாது என்று நான் சொன்னேனா… எதுக்கு நான் ராஜினாமா செய்யணும்னு எதிர்த்து கேள்வி கேட்டு தாமரை தலைவரை அலற விட்டதாக, பெண்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மக்களின் வரிப்பணத்தை கரைக்கும், கன்சல்டன்ட் ஆட்டத்தை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைப்பு, மல்டி லெவல் கார் பார்க்கிங், ரேஸ்கோர்ஸ் நடைபாதை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. 24 மணி நேர குடிநீர் திட்ட பணியும் நடக்கிறது. இந்த திட்ட பணிகளுக்கு கன்சல்டன்டாக 10 ஆண்டிற்கு மேலாக ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இலை ஆட்சி காலத்தில் ஆலோசனைக்காக நியமிக்கப்பட்டவர். ஆட்சி மாறியும் இவரது கை இன்னும் உச்சத்திலேயே உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளுக்கு இவர் பாஸ் போல் செயல்பட்டு வருகிறார். இவர் சொல்லும் நபருக்கு தான் மாநகராட்சி திட்ட பணிகள் ஒதுக்கீடு ெசய்யவேண்டும். எப்போது எந்த பொருட்களை எங்கேயிருந்து பர்சேஸ் செய்யவேண்டும் என இவர் தான் முடிவு செய்கிறாராம். மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த 4 அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இவர்களுடன் கைகோர்த்து ஆட்டம் போட்ட இந்த கன்சல்டன்ட் ஆட்சி மாறிய பின்னும் அதிமுக விசுவாசத்தை மறைத்து போலி வேசம் போட்டு மாநகராட்சியில் வலம் வருவதாக தெரிகிறது. நேர்மையான கன்சல்டன்டை நியமித்து மாநகராட்சியில் திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். தனது சொந்த ஆதாயத்திற்காக மாநகராட்சியில் வளம் கொழிக்கும் இந்த ஆலோசகரை மாநகராட்சியில் விடக்கூடாது என நேர்மையான அலுவலர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பழைய தவறுகள், புதிதாக வந்து பயமுறுத்துதாமே அப்டியா…’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்ட கூட்டுறவு வங்கிகள்ல அடகு வைக்கப்பட்ட நகைகளை, வெளி மாவட்டத்தை சேர்ந்த குழுக்கள் ஆய்வு செய்து வர்றாங்க. ஒவ்வொரு குழுவும் தினமும் 250 நகை பாக்கெட்டில் உள்ள தங்கத்தின் தரத்தை சோதிச்சு பாக்குறாங்க. இதுல போலி நகை, தரம் குறைந்த தங்கத்தை வைத்து நகைக்கடன் வாங்குனது இருக்காம். போலி நகைகளை வைத்து லட்சக்கணக்கில் வாங்கி ஜாலியாக இருந்தவர்கள், போலி நகையில் மாட மாளிகை கட்டியவர்கள் எல்லாம் இப்போது அது நிலைக்குமா என்று பயத்தில் இருக்கிறார்களாம். இதுல நிறைய போர் உள்ளூரை சேர்ந்த இலைக்கட்சிக்காரங்க. இவங்கதான் கூட்டுறவு சங்கத்தை ஏமாற்றிய சக கட்சிக்காரர்களிடம் சொல்லி புலம்புறாங்களாம்.  எப்படியும் வங்கி நிர்வாகத்தில நேரடி தொடர்புல இருந்த முக்கிய நிர்வாகிகள் எல்லாம் சிக்குவாங்கன்னு, அதுல சின்ன மீனான நெத்திலியும் சிக்கும், பெரிய மீனான திமிங்கலமும் சிக்கும் என்று அலுவலர்கள் மத்தியில பரபரப்பா பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘உழைக்கா விட்டால் ஊதியம் கிடைக்காது… கட்சி ேவலை செய்யாவிட்டால் டெபாசிட் கிடைக்காது என்ற சின்ன லாஜிக் கூட தெரியாத கட்சிக்கார் யாரு…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘வெயிலூர் மாவட்டம் குப்பம்னு முடியுற தொகுதியில, கடந்த ஆட்சியில இலைகட்சியை சேர்ந்தவரான, பெயரின் முடிவுல நாதன் பெயரை கொண்டவரு எம்எல்ஏவாக இருந்தாரு. இவரு திரும்பவும் எம்எல்ஏவாக சீட் கேட்டாரு, ஆனா கட்சியில அவருக்கு சீட் கொடுக்கல. இதனால கட்சி மேல அதிருப்தியில இருந்தாரு. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல்ல மாஜி எம்எல்ஏ, தனது வீட்டுக்காரம்மாவ அதே தொகுதியில ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டி போடவெச்சாரு. ஆனா, தேர்தல்ல அவரோட வீட்டுக்காரம்மா டெபாசிட் கூட வாங்கலையாம்…’ என்றார் விக்கியானந்தா. ‘‘உட்கட்சி மோதலால் இலை கட்சி 50வது ஆண்டு பொன்விழாவில் மாவட்ட செயலாளருக்கு ஏகப்பட்ட சிக்கலாமே..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சட்டமன்ற தேர்தல்  நேரத்தில் செல்வாக்கு மிக்க தேனி ஆதரவாளரான மாவட்ட செயலாளரை மாற்றிவிட்டு  பணபலம் மிக்க சேலம் ஆதரவாளர் மாவட்ட செயலாளரானார்.  தனக்கு ஒரு கண்  போனால்… எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்ற எண்ணத்தில் தேனி ஆதரவாளரான முன்னாள் மாவட்ட செயலாளருக்கு சீட்டு வழங்கவில்லையாம். சேலம் ஆதரவாளரான மாவட்ட செயலாளருக்கு சீட் வழங்கப்பட்டதாம். ஆனால் அவரால்  டெபாசிட் கூட வாங்க முடியவில்லையாம்… புதிதாக உதயமான மாவட்டத்தில் சின்னக் கடைவீதியில்  நேற்றுமுன்தினம் முன்னாள் மாவட்ட செயலாளர் நடத்திய இலைகட்சி 50வது ஆண்டு  பிரமாண்டமான பொன் விழா கூட்டத்தில் 5 முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய  நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் வந்தார்களாம். இவர்களில் பாதிபேர் சேலம்காரருக்கு வேண்டப்பட்டவராம்.  இதற்கிடையில் மாவட்ட செயலாளர் மீது  காவல்நிலையங்களில் உள்ள கொலை மிரட்டல் உள்ளிட்ட பழைய வழக்குகள் குறித்து  தற்போது  தூசு தட்டப்பட்டு விசாரணைக்கு வந்துள்ளதாம். இதனால் புதிதாக  உதயமான மாவட்டத்தில்  மாவட்ட செயலாளருக்கு கட்சியில் செல்வாக்கும் சரிந்து  வருவதால் இபிஎஸ் ஆதரவாளர்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா