சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர் நிலைப்பள்ளியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தனது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருடன் நேற்று காலை 11.20 மணிக்கு வந்து வாக்கு அளித்தார். பின்னர், பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா தொற்று காரணமாக வாக்களிக்க வரவில்லை. தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் செய்தபோது மக்களிடம் பார்த்த காட்சிகளை நான் இப்போது பதிவிட விரும்புகிறேன். நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வாய்ப்பு இந்த தேர்தலில் கிடைத்திருக்கும். ஆனால் திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் தனியாகத்தான் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் இந்த முறை முதன்முதலாக புதிய முறையில் தேர்தல் நடந்து வருகிறது. எனவே வாக்கு சதவீதம், ஓட்டு பிரிவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தேமுதிகவின் வாக்கு வங்கியை இந்த தேர்தலில் பார்க்கலாம்.மக்களிடம் ஓட்டு போட ஆர்வமில்லை. வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 156 இடங்களில் தேமுதிக போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அது வரவேற்கத்தக்கதாகும்….