சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாராது வந்த மாமணி போல் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சித் தேர்தல்கள் வந்திருக்கின்றன. 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை அஇஅதிமுக அரசு நடத்தவில்லை என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாளை நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நம்முடைய நகரத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை அக்கறையுடன் நிறைவேற்றக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றிபெற வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நாளை ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் 2.50 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளார்கள். பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19ம் தேதி பொது விடுமுறை அரவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. …