நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் 5794 வாக்குச்சாவடிகள்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக சென்னையில் 5794 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 5794  வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கடந்த 6ம் தேதி வெளியிட்டார். வரைவு வாக்குச்சாவடி பட்டியல் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் கடந்த 15ம் தேதி நடந்தது. வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் இருப்பின் 16ம் தேதிக்குள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  அவ்வாறு பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5794 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்