ஊட்டி, டிச. 3: ஊட்டி நகராட்சி மார்க்கெட் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடந்த 80 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவைகளில் பெரும்பாலான கடைகள் பழமை வாய்ந்தது என்பதால் தற்போது வலுவிழந்து காணப்படுகின்றது. இதனால், இந்த கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, 190 கடைகள் இடிக்க நகராட்சி நிர்வாக முடிவு செய்து இதற்காக ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த வாரம் முதல் ஊட்டி மார்க்கெட்டில் பூட்டிக் கிடக்கும் கடைகளை இடிக்கும் பணிகள் துவக்கப்பட்டது. நேற்று முதல் ஜேசிபி இயந்திர மூலம் இந்த கடைகளை இடிக்கும்பணி துவங்கியது. தற்போது ஏடிசி பார்க்கிங் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளுக்கு நகராட்சியில் உள்ள கடைகள் மாற்றப்பட்டால், நகராட்சி ஒரு பகுதி கடைகள் விரைவில் இடித்து தள்ளப்பட்டு புதிய கடைகள் பார்க்கிங் தளத்துடன் கட்டப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது நகராட்சி மார்க்கெட் கடைகள் இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.