Friday, July 5, 2024
Home » தொழிலதிபர் கடத்தலில் உதவி கமிஷனருக்கு உடந்தை இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உயர் அதிகாரிகள் சொன்னதால் கடத்தியதாக பரபரப்பு வாக்குமூலம்

தொழிலதிபர் கடத்தலில் உதவி கமிஷனருக்கு உடந்தை இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உயர் அதிகாரிகள் சொன்னதால் கடத்தியதாக பரபரப்பு வாக்குமூலம்

by kannappan

சென்னை: தொழிலதிபர் கடத்தலில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். அவர், உயரதிகாரிகளின் வற்புறுத்தல் காரணமாகவே தொழிலதிபரை கடத்தினோம் என்று சிபிசிஐடி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவர் தன்னை உதவி கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 10 பேர் கடத்தி சென்று சொத்துகளை ஆந்திராவை சேர்ந்த சீனிவாச ராவ், தருண் கிருஷ்ணபிரசாத் ஆகியோர் பெயருக்கு பதிவு செய்ய வற்புறுத்தினர் என்று கடந்த 2019ல் போலீசில் புகார் கொடுத்தார்.இந்த புகார் மீது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த வழக்கின் விசாரணை தீவிரமாகவே இன்ஸ்பெக்டர் சரவணன்  தலைமறைவானார். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சரவணனை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், தனக்கும் ராஜேசுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக கடத்தலில் ஈடுபட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி போலீசார் பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கூறும்போது, சரவணனின் செல்போன் கால்களை ஆய்வு செய்தோம். யாருடனெல்லாம் அவர் பேசியுள்ளார் என்று ஆய்வு செய்தோம். குறிப்பாக தலைமறைவாக உள்ள உதவி கமிஷனர் சிவகுமாரிடம் பேசினாரா என்பதை ஆராய்ந்தோம். ஆனால், அப்படி எதுவும் இல்லை. வேறு மொபைல் எண் மூலம் உதவி கமிஷனர் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் பேசி இருக்கலாம் என்று தெரிவித்தனர். தற்போது சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.தொழிலதிபர் கடத்தல் வழக்கில் இதுவரை இன்ஸ்பெக்டர் சரவணன், ஸ்ரீகந்தன் என்ற கோடம்பாக்கம் ஸ்ரீவெங்கட சிவஞானகுமார், தனபால், சவுகத் அலி, நந்தகுமார், சரவணகுமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் தலைமறைவாக உள்ள உதவி கமிஷனருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிலதிபர் கடத்தலில் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த விவகாரம் போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதில் உதவி கமிஷனர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். …

You may also like

Leave a Comment

20 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi