பூந்தமல்லி: மதுரவாயல் ஏகாம்பரம் நாயக்கர் தெரு பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன. இங்கு காயத்ரி என்பவருக்கு சொந்தமான சோப்பு ஆயில் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். அதிகாலையில் இந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராமாபுரம் தீயணைப்பு அதிகாரி பாலச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது நாசவேலை காரணமா என விசாரிக்கின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் என கூறப்படுகிறது….