சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்ஆர்எம்யூ சார்பில் அதன் பொதுச்செயலாளர் என்.கன்னையா தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு தொழிற்சங்க அங்கீகார தேர்தல், தொழிலாளர் நலனுக்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கான முறைகள் உள்ளடக்கிய புதிய சட்ட விதிகளை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்துள்ளது. இச் சட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரம் தொடர்பாக 2 சரத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்பது அந்நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் 51 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களாக இருந்தால் அந்நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் 20 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய தொழிற்சங்கங்களே பேச்சுவார்த்தை குழுக்களில் இடம்பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சரத்துக்களை அமல்படுத்தவே முடியாது. பதிவான மொத்த வாக்குகளில் அதிகம் பெற்றவர்களே வெற்றி பெற்றதாக அறிவிப்பது வழக்கம். அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் என்பது இதுவரை சட்டமாக்கப்படாத நிலையில், இந்த சரத்துக்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிராக உள்ளது. எனவே அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக உள்ள இந்த புதிய விதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி, வக்கீல் சி.ேக.சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….