சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், அத்திக்கவுண்டன்புதூர், இண்டியம்பாளையம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த கடந்த மாதம் செங்கல் சூளையில் ஒரு செங்கல் ரூ.7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்து ரூ.8.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செங்கல் தயாரிக்க தேவைப்படும் மண் எடுக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முறையான அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பல செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்க தேவைப்படும் மண் இல்லாததால் சூளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் செங்கல் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள கூலித்தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக செங்கல் தயாரிக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என செங்கல் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….