திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தொடர் மழையிலும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலை காணப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்றும் காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில், தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனத்துக்காக திரண்டனர். அதனால், வழக்கம் போல கோயிலில் கூட்டம் அலைமோதியது. மேல்மருவத்தூர் மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அதனால், பக்தர்களின் வருகை கணிசமாக உயர்ந்திருக்கிறது. தற்போது, மார்கழி மாதம் என்பதால் கோயில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதோடு, பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால், மதிய நேரத்தில் நடை அடைப்பதும் இல்லை. எனவே, அதிகாலை முதல், இரவு கோயில் நடை அடைக்கும் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று தொடர்ந்து மழை பெய்தபோதும், அதனை பொருட்படுத்தாமல் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், மழையில் நனைந்தபடி கிரிவலம் சென்றனர். மேலும், குடை பிடித்தபடி கிரிவலம் செல்வது மரபு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மழையில் கிரிவலம் செல்ல இயலாத ஒருசில பக்தர்கள் ஆட்டோ மற்றும் காரில் கிரிவலம் செல்லும் நிலையும் காணப்பட்டது….