தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

 

பல்லாவரம், ஜூலை 14: சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. பகல் நேரத்தில் வெயில் வாட்டினாலும் மாலையில் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்று, இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்குகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் காரணமாக ஏரியில் தண்ணீர் வற்றி காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது 980 கனஅடி நீர் அதிகரித்தது.

நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 14.81 அடியாகவும், நீர்வரத்து மணிக்கு 980 கன அடியாகவும் மொத்த கொள்ளளவு 1497 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீர் மற்றும் சிப்காட் தேவைகளுக்காக மணிக்கு 147 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வராமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 72 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பெய்யும் மழையின் அளவு அதிகரித்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

முசிறி டிஎஸ்பி பொறுப்பேற்பு

சமயபுரம் அருகே கோயில் பூசாரி வீட்டில் 2 ஆடுகள் திருட்டு

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்