கோவை, ஜன.1: தமிழ் பாரம்பரிய கலைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் சிலம்பம் விளையாட்டு ஆர்வலர்கள் இணைந்து புதிய நோபல் உலக சாதனையை நடத்தினர். கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அவனி சிலம்ப கலை பயிற்சி மையம் சார்பாக மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 44 பேர் இணைந்து தொடர்ந்து எட்டு மணி நேரம் பதினைந்து நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ், தீர்ப்பாளர் சிவ முருகன் ஆகியோர் அங்கீகரித்து இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சாதனை சான்றிதழ்களை வழங்கினர். இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் பயிற்சியாளர் சுந்தரபாண்டி, தலைமை ஆசான் கருப்புசாமி ,மற்றும் பயிற்சியாளர் அறிவானந்தம் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.