தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில் 426 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை

திருவள்ளூர், ஜூலை 13: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2018 முதல் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 18 வயது வரை குழந்தைகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ‘ராஷ்டிரிய பால ஸ்வஸ்த்ய கார்யகரம்’ திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் இருந்தும், தலா 2 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பிறந்த குழந்தைளை பரிசோதனை செய்து, குறைபாடு உள்ள குழந்தைகளை இம்மையத்திற்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்மையத்தின், கண்காணிப்பு அலுவலரான ஜெகதீஷ்குமார் தலைமையில், 3 மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இம்மையத்தில் கடந்த, 2018ல் இருந்து 426 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் மருத்துவர் ரேவதி, குழந்தைகள் சிகிச்சை மைய தலைமை மருத்துவர் ஸ்டாலின் ஆகியோர் கூறியதாவது: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில், இதுவரை, 426 குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ எனப்படும் காது கேட்கும் கருவி, 25 குழந்தைக்கும், 29 பேருக்கு கண்புரை லேசர் தெரபி, 26 பேருக்கு பிறவி கண்புரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 115 பேருக்கு பிளவு உதடு மற்றும் அண்ணம் சிகிச்சையும், உடல் ஊனமுற்ற 44 குழந்தைகளுக்கு இலவசமாக சிறப்பு உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆண்டுக்கு தலா ₹1.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி ‘ஹார்மோன்’ ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது