தேவகோட்டை அருகே கார் மோதி 6 ஆடுகள் பலி

 

தேவகோட்டை, ஜூன் 8: தேவகோட்டை அருகே கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (48). இவர் தனது வீட்டில் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். கோடைகாலம் என்பதால் வீட்டில் இருந்து ஆடுகள் திறந்து விடப்பட்டு மேய்ச்சலுக்கு தானாகவே சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எப்போதும் வீட்டுக்கு வரும் ஆடுகள் வராததால் கணேசன் மற்றும் அவரது உறவினர்கள் அருகிலுள்ள கிராமங்களில் தேடி உள்ளனர்.

ஆனால் ஆடுகளை காணவில்லை. நேற்று திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தச்சவயல் மேம்பாலத்தில் கணேசனின் ஆடுகள் நின்றுள்ளன. அப்போது ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஆடுகளின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 ஆடுகள் பலியானது. 5 ஆண்டுகள் காயமடைந்தன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தேவகோட்டை தாலுகா போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது காரின் நம்பர் பிளேட் சாலையில் கிடந்துள்ளது. அதன்மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தகவலறிந்து வந்த கணேசன் இறந்த ஆடுகளை கண்டு வேதனை அடைந்தார். மேலும் காயம்பட்ட 5 ஆடுகளை மீட்டு சிகிச்சையளிக்க சரக்கு வாகனத்தின் மூலம் வீட்டிற்கு கொண்டு சென்றார்.

 

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு