Sunday, October 6, 2024
Home » தேர்தல் முடிவுக்காக காத்திருந்து கை விரித்த மத்திய அரசு சமையல் செய்ய இனி விறகு, கட்டை, கரி அடுப்புதான்: கொந்தளிக்கும் இல்லத்தரசிகள்

தேர்தல் முடிவுக்காக காத்திருந்து கை விரித்த மத்திய அரசு சமையல் செய்ய இனி விறகு, கட்டை, கரி அடுப்புதான்: கொந்தளிக்கும் இல்லத்தரசிகள்

by kannappan

திருப்போரூர்: நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக காத்திருந்த மத்திய அரசு, காஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலையை ஏற்றி, கையை விரித்துவிட்டது. இனி விறகு, கட்டை, கரி அடுப்பைத்தான் பயன்படுத்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த இல்லத்தரசிகள் கொந்தளிப்புடன் கூறுகின்றனர்.திருப்போரூர், பாலாஜி நகரை சேர்ந்த இல்லத்தரசியான சௌஜத் சம்சுதீன்: பெட்ரோல், டீசல், காஸ்  விலைவாசி உயர்வு குறித்து  பேசும்போது, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்த மத்திய அரசு, தற்போது பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றின் விலைகளை திடீரென உயர்த்தி, எங்களை போன்ற இல்லத்தரசிகளின் சேமிப்பில் கை வைத்துள்ளது. ஏற்கனவே, காஸ் மானியம் என்ற பெயரில் வழங்கப்பட்ட சிறிய தொகையையும், தற்போது ₹20 என்ற நிலைக்கு கொண்டு வந்து, வயிற்றில் அடித்து விட்டது. இப்போது பெட்ரோல், டீசல் விலையையும் வழக்கம்போல் உயர்த்த தொடங்கி விட்டது. ஒரே நாளில் ₹50 என காஸ் சிலிண்டர் விலையை அறிவித்துள்ளதால், இனி பழங்காலம் போல் விறகு, கட்டை, கரி அடுப்புகளை நோக்கி பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.கண்ணன் (மேல்மருவத்தூர்)  :  நான் காய்கறி பயிர் செய்து தினமும் சுமார் 10 கிமீ பைக்கில் கொண்டு சென்று, லாரிகளில் ஏற்றி சென்னைக்கு அனுப்புகிறேன். இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை, எனது பைக் பெட்ரோல் செலவு உயர்ந்துவிட்டது. மிக குறைந்த லாபம் தரும் காய்கறி பயிர் செய்யும் என்னை போன்றவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சிந்தனை சிவா (மாமல்லபுரம்): கொரோனாவால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள், ஆட்டோ டிரைவர்ககளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல், விலையேற்றத்தால் ஆட்டோவை இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்க முன்வர வேண்டும்.ஜி.செல்வக்குமார் (திருக்கழுக்குன்றம்): டீசல், காஸ் விலை எல்லையில்லா அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிப்பதுபோல உள்ளது. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம், கொரோனா ஊரடங்கு காலத்தில் முடங்கிக் கிடந்து ஓரளவுக்கு மக்கள் சகஜ நிலைக்கு வருகின்றனர். இந்த நேரத்தில், திடீர் விலை உயர்வு என்பது ‘குருவி தலையில் பனங்காயை வைப்பது போல்’ மக்கள் மீது இந்த விலையேற்ற திணிப்பு என்பது ஏற்புடையதல்ல.சதீஷ் (செங்கல்பட்டு): கடந்த 2 ஆண்டாக கொரோனா பாதிப்பால், வெளியில் செல்ல முடியாததாலும், கோயில்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாலும் எப்சி, இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வால், வாகனங்களை ஓட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 5 மாநிலங்களில் நடந்த தேர்தலுக்கு முன்புவரை அமைதியாக இருந்த ஒன்றிய அரசு, தற்போது தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது.சோழனூர் ஏழுமலை (உத்திரமேரூர்): மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளின் விளை பொருட்களும் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. காஸ் சிலிண்டர் என்பது தற்போது உள்ள காலகட்டத்தில் அடித்தட்டு மக்கள் முதல் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இந்த நேரத்தில் காஸ் சிலிண்டர் விலை உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை, உத்திரமேரூர் இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கம் சார்பில், ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.டி.முனியப்பன் (வாலாஜாபாத்): ஒன்றிய அரசால் தொடர்ந்து பெட்ரோல், டீசல், காஸ் விலை அதிகரித்து வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் இதனை பெரும் சுமையாக, தாங்க வேண்டிய சூழ்நிலையாக உள்ளது. இனி வரும் கலங்களில் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத சூழலும், வீடுகளில் சமையல் காஸ் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.டில்லிபாபு (காஞ்சிபுரம்) : பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. காஸ் விலையும் உயர்ந்திருக்கிறது. இதனால் நடுத்தர மக்களாகிய நாங்கள் மிகவும் பாதிப்படைகிறோம். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவது கஷ்டமானதாகிவிட்டது. ஒருமுறை மட்டும் தான் போக முடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால். மாலை நேரங்களில் நடந்து செல்லலாம், இல்லாவிட்டால், சைக்கிள் வாங்கி விடலாம் என நினைக்கிறேன். சைக்கிள் விலையும் அதிகமாக உள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறேன்.எஸ்.அமீத்கான் (வல்லம் ஊராட்சி வார்டு உறுப்பினர்): சமையல் காஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு, இல்லத்தரசிகளின் தலையில் இடியாக விழுகிறது. வீட்டில் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் பெண்களுக்கு சேமிப்பு என்பது கனவாக மாறிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விலை உயர்வுக்கு மத்திய அரசின் அலட்சிய போக்கே முக்கிய காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களும்  நாளுக்கு நாள் விலை உயர்கிறது. இதனால், தினக்கூலி மற்றம் நடுத்தர மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். …

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi