தேர்தல் பணியில் ஈடுபடும் வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தபால் வாக்கு கோரி வழக்கு : தேர்தல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை : வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவது குறித்து பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.அதில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் அதிகாரிகளை அழைத்துச் செல்லவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லவும் என தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும், வாடகை வாகன ஓட்டுனர்களும், பால், குடிநீர், காய்கறிகள், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களும் வாக்களிக்க முடியவில்லை.நூறு சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு செயல்படும் தேர்தல் ஆணையம், வாக்களிக்க இயலாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களும் வாக்களிக்கச் செய்வதற்கு எந்த நடைமுறையும் செய்து தரவில்லை.வாகன ஓட்டுனர்களும் இந்திய குடிமக்கள் என்ற அடிப்படையில் வாக்களிக்க தங்களுக்கு தகுதி உள்ளதாகவும், பணி காரணமாக, 8 லட்சம் ஓட்டுனர்களால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.எங்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்காததால், வாடகை வாகன ஓட்டுனர்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தபால் வாக்கு வசதியை ஏற்படுத்தித் தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாடகை வாகன ஓட்டுனர்கள் தனியார் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வாடகை வாகன ஓட்டுனர்களை அடையாளம் கண்டு, தபால் வாக்களிக்க அனுமதிப்பது என்பது சாத்தியமில்லாதது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக மனுதாரர் சங்கம், 2020 நவம்பர் 10ம் தேதி அளித்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை