சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் மீதான விவாதங்களுக்காக 3வது நாளாக தொடங்கியது. அப்போது; மடத்துக்குளம் தொகுதி எரிசினம் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு ஆவண செய்யுமா? என மடத்துக்குளம் எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; எரிசினம்பட்டியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடனும் செயல்பட்டு வருகிறது. எனவே, எரிசினம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தரம் உயர்த்துவது பற்றி முடிவெடுக்கப்படும். என கூறினார். தொடர்ந்து தேக்கம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? என எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்; கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த ஆண்டில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு, 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரும் நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தேக்கம்பட்டியிலும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கூறினார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் கேள்விக்கும் பதிலளித்தார். …