தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் பின்புறம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில், ரூ.1.44 கோடி மதிப்புள்ள 109 ஏக்கர் 43 சென்ட் நிலத்தை, பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் அன்னப்பிரகாஷூக்கு பட்டா மாறுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் அளித்த புகாரின்பேரில், ஏற்கனவே, துணை தாசில்தார்கள் சஞ்சீவ்காந்தி, மோகன்ராம், தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வடவீரநாயக்கன்பட்டி சர்வேயர் பிச்சை மணி, விஏஓ சுரேஷ், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், நிலமோசடி நடந்த காலத்தில் அங்கிருந்த கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா மற்றும் அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்னப்பிரகாஷ் ஆகியோர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல, பெரியகுளம் தாலுகா தாமரைக்குளம் கிராமத்தில் ரூ.60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான 60 ஏக்கர் 5 சென்ட் அரசுநிலத்தை பட்டா மாறுதல் செய்தது, தொடர்பாக, சர்வேயர் பிச்சை மணி, மண்டல துணை தாசில்தார்கள் சஞ்சீவ்காந்தி, மோகன்ராம், தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்தினமாலா, பெரியகுளம் கோட்டாட்சியராக இருந்த ஜெயபிரிதா மற்றும் பட்டா மாற்றம் செய்யப்பட்ட முத்துவேல்பாண்டியன், போஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி கிராமத்தில், 13 ஏக்கர் 2 சென்ட் அரசு நிலம் கையாடல் தொடர்பாக சர்வேயர் சக்திவேல், மண்டல துணைத்தாசில்தார் மோகன்ராம், தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், பெரியகுளம் கோட்டாட்சியர்களாக இருந்த ஆனந்தி, ஜெயபிரிதா, சர்வேயர் சக்திவேலின் உதவியாளர் அழகர், துணை வட்டாட்சியர் மோகன்ராமின் உதவியாளர் ரமேஷ்கண்ணன் ஆகிய 8 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த 182 ஏக்கர் நில மோசடி தொடர்பாக அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …