Sunday, September 8, 2024
Home » தேனியில் தூய்மை பணியாளர்கள் பணித்திறன்ஆய்வுக் கூட்டம்

தேனியில் தூய்மை பணியாளர்கள் பணித்திறன்ஆய்வுக் கூட்டம்

by MuthuKumar

தேனி, நவ. 30: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தூய்மை பணியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் தேனி மாவட்ட தூய்மை பணியாளர்கள் பணித் திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணையத் தலைவர் வெங்கடேசன் கூறியதாவது, தூய்மை பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும், மேலும், பணியாளர்களின் பணிப்பதிவேடு, பணி மூப்பு வரன்முறைப்படுத்துதல் போன்ற அலுவலக ரீதியான பணிகளை அலுவலர்கள் பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும். கலெக்டர் உத்தரவின்படி, தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் வேறுபாடு தொகையை கணக்கீடு செய்து பணியாளர்களுக்கு நிலுவைத் தொகையாக வழங்குவதுடன், நடப்பு மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்ட ஊதிய தொகையினை வழங்கிட, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தூய்மை பணியாளர்கள் எளிதில் அறிந்தும் கொள்ளும் வகையில் ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் தூய்மை பணியாளர்களுக்கு சென்றடையும் வகையில் முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு தொகை சரியாக பிடித்தம் செய்து அவர்களது கணக்கில் வரவு செய்வதுடன் பணியாளர்களுக்கு அதன் விவரம் குறித்து அவ்வப்போது தெளிவுபடுத்த வேண்டும்.

மாதாந்திர ஊதியத்தை வங்கிகணக்கில் வரவு வைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதை அரசு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு உரிய சலுகைகளை பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும். பணியாளர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் 011-24648924 மற்றும் 88834 88888 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். ஆணையத்தில் தெரிவித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து தரப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவ ட்ட போலீஸ் எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா, உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணாதுரை, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர்கள், தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணைய நலக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

nineteen − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi