தேனி, ஏப்.21: தேனியில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை விட வெப்பம் அதிகமாக இருக்க கூடும் என தமிழக பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் வெப்பக் காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படியே தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலையிலேயே வெய்யிலின் தாக்கத்தினால் உடல் சூடு அதிகரித்து வியர்வை சுரக்க ஆரம்பிக்கிறது. பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெய்யில் தாக்கம் உள்ளது. வீடுகளுக்குள் இருந்தாலும், அனல் காற்றின் தாக்கம் உள்ளது. எனவே வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் தினமும் குடிநீரை தினசரி அளவைக் காட்டிலும் கூடுதலாக பருக வேண்டும்.
டீ, கார்பனேட் குளிர்பானங்களை தவிர்த்து ஓஆர்எஸ் பவுடர், நீர் ஆகாரம், மோர், எலுமிச்சை சாறுகலந்த நீர் பானங்களை பருகிடலாம். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே பொதுமக்கள் செல்வதை தவிர்த்திட வேண்டும். இதன் மூலம் தோல் நோய், படபடப்பு போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.