டெல்லி: தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் சைடஸ் கேடிலா தடுப்பூசியை சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் அருகே சங்கோதர் பகுதியில் இயங்கி வரும் சைடஸ் கேடிலா நிறுவனம் சைகோவ்-டி என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. சைகோவ்-டி கொரோனா தடுப்பூசியானது புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டவை என்று சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்து இருந்தது. சைடஸ் கேடிலா நிறுவனம் தனது சைகோவ்-டி தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கும் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது. தங்கள் தடுப்பூசி குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுத்தாமல், கொரோனாவில் இருந்து காப்பாற்றும் வீரியம் கொண்டது என்று சைடஸ் கேடிலா நிறுவனம் கூறி இருந்தது.இந்நிலையில், தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சைடஸ் கேடிலா தடுப்பூசி சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல் தெரிவித்துள்ளார். ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டாக்டர் வி.கே.பால், தற்போது உள்ள தரவுகளின்படி நாட்டில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்தார். தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் சைடஸ் கேடிலா தடுப்பூசியை சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், ஊசி இல்லாமல் செலுத்தப்படும் தடுப்பூசி என்பதால் அதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், லட்சத்தீவு, சண்டிகர், கோவா, இமாச்சலப்பிரதேசம், அந்தமான் அண்ட் நிக்கோபார் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தெரிவித்தார். …
தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் சைடஸ் கேடிலா தடுப்பூசி!: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்..!!
previous post