Friday, September 20, 2024
Home » தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்: நோய் பரவுவதற்கான காரணங்களை கண்டறிய 15 பூச்சியியல் வல்லுனர்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்த 2 லட்சம் துண்டு பிரசுரங்கள்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்: நோய் பரவுவதற்கான காரணங்களை கண்டறிய 15 பூச்சியியல் வல்லுனர்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்த 2 லட்சம் துண்டு பிரசுரங்கள்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

by kannappan

சென்னை: தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், நோய் பரவு வதற்கான காரணத்தை கண்டறிய 15 பூச்சியியல் வல்லுனர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் 2 லட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னையில் கடந்த 2 வாரமாக பெய்த கனமழையினால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் மழை வெள்ளத்துடன் கழிவு நீரும் வெளியேறி பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளை டெங்கு காய்ச்சல் அதிகம் பாதிக்கிறது. தெருக்களில் தொடர்ந்து மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிலும், 20 குழந்தைகள் லேசான அறிகுறிகளுடன் பொது வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நவம்பர் மாதத்தில் சென்னையில் 106 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் கடந்த 2017ம் ஆண்டு 8,515 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு  இருந்தனர். 2018ம் ஆண்டு 3,846 பேரும், 2019ம் ஆண்டு 2,182 பேரும், கடந்த  ஆண்டு 139 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு கடந்த 11  மாதங்களில் 744 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் டெங்குவை  கட்டுப்படுத்த 5.22 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்படும் குழந்தைகள் காய்ச்சல் முகாம் மூலம் கண்டறியப்படுகிறது. தண்ணீர் தேங்கிய இடங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்கப்படுகின்றது. மேலும் தெருக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் நோய் பரவுவதற்கான காரணத்தை கண்டறிய 15 பூச்சியியல் வல்லுனர்களும் பணியாற்றி வருகின்றனர். டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படும்.மேலும் இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்: குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகளை பெற்றோர் முன்கூட்டியே கண்டறிய வேண்டும். ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால் அது மூளையில் ரத்த கசிவுக்கு வழிவகுக்கும். பித்தப்பை வீக்கத்தை ஏற்படுத்தும். நுரையீரலுக்கு வெளியே திரவத்தையும் உருவாக்கும். டெங்குவை கண்டறிய தாமதம் ஆனாலோ, ரத்தத்தில் பிளேட்லெட் குறைந்தாலோ உடனடியாக குழந்தைக்கு ரத்தம் ஏற்ற வேண்டும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படலாம். குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படவில்லை. மேலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலும் உள்ளது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் டெங்கு காய்ச்சல் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்….

You may also like

Leave a Comment

20 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi