சென்னை: கடந்த 2019ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி நடிகர் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்ததோடு, மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்து கவனிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதனை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பெஞ்ச், முன்னதாக நடத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், பதிவான ஓட்டுகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் எனவும் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுதாரர்களில் ஒருவரான ஏழுமலை மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற புதிய அமர்வான நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீண்டும் உறுதி செய்ததோடு, ஏழுமலை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து முன்னதாக நடத்தி முடிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும் என மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது….