தென்காசி, செப்.11: தென்காசியில் மகளிர் சுயஉதவி குழுவினர் நடத்தும் சிறுதானிய உணவகத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நுழைவு வாயில் பகுதியில் கடந்த சில வாரங்களாக மகளிர் சுயஉதவி குழுவின் சார்பில் சிறுதானிய உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் உணவகத்தில் உள்ள அடுப்பில் இருந்து திடீரென தீ பரவியது.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு ஈரமான சாக்கை சிலிண்டரின் மீது வைத்து தீயை அணைத்தனர். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். ரெகுலேட்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவின் காரணமாக தீ பற்றியதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.