திருத்தணி: திருத்தணி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில், நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் திருத்தணி நகராட்சி நடைபெறுகிறது. இதன்ஒரு பகுதியாக திருத்தணி நகராட்சி சார்பில், பொதுமக்களுக்கு பாட்டு மற்றும் சுவர் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் திருத்தணி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, ‘’என் குப்பை எனது பொறுப்பு’’, கழிவுகளை பிரித்தல், நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பது, பிளாஸ்டிக்கை தவிர்ப்பது அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்போம்’’ என்ற தலைப்புகளில் பாடல்கள் இருக்கவேண்டும். சர்ச்சைக்குரிய பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். பாடல்கள் இசையுடன் 3 நிமிடங்களில் இருந்து 5 நிமிடம் வரை உள்ளதாக இருக்க வேண்டும். இதில் வெற்றிப்பெறுகின்றவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. 2ம் பரிசு 10 ஆயிரம், 3ம் பரிசு 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசு 5 பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், திருத்தணி பகுதியில் உள்ள சுவர்களில் மாணவ, மாணவிகள் வண்ண, வண்ண ஓவியம் தீட்டி வருகின்றனர். இவற்றை திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம், நகராட்சி பொறியாளர் கோபு, நகராட்சி மேலாளர் நாகரத்தினம், நகரமைப்பு ஆய்வாளர் தயாநிதி, நகராட்சி ஓவர்சீஸ் நாகராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் முகமது அலி, நந்தகுமார், ஜெகன்நாதன், ராஜேஷ், சண்முகம், காரனேஸ்வரன் உள்பட பலர் ஓவியங்களை பார்வையிட்டனர்….