பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நேற்று, தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில், மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரித்து அப்புறப்படுத்தப்படுகிறது. இருப்பினும், ‘என் குப்பை, என் பொறுப்பு’ என்ற திட்டத்தின்கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த சில மாதமாக பலரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதை தொடர்ந்துள்னர். அவ்வாறு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கப்படும் குப்பைகளை, நகராட்சிக்குட்பட்ட நுண் உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. சுகாதாரம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு கட்ட விழிப்புணர்வினை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக நேற்று, தமிழக அரசின் திட்டமான தூய்மைக்கான மக்கள் இயக்க நிகழ்ச்சி, மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம ஐயங்கர் நகராட்சி மேல்நிலை பள்ளியில் உள்ள, ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு, நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த சுமர் 550 மாணவர்கள் கலந்து கொண்டு, என் குப்பை என் பொறுப்பு என்ற என்ற வாசகத்திற்குரிய எழுத்துக்களை போல வரிசையாக நின்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையாளர்கள் பலரும் கண்டு ரசித்ததோடு, பாராட்டும் தெரிவித்தனர்….